வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு தொடர் கதை

டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.


2014ஆம் ஆண்டில் மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகிலிருந்தே நாட்டில் போதிய அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதோடு, வேலையில்லாமல் இருக்கும் மக்களின் எண்ணிக்கையும், உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாத ஊழியர்களும் அதிகமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் இருக்கின்றன. 2019ஆம் ஆண்டில் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் வேலை உருவாக்கத்தில் அதிகக் கவனம் செலுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு மாதமும் வேலையின்மை பிரச்சினை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 7.7 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இதற்கு முன்னர் நவம்பர் மாதத்தில் வேலையின்மை விகிதம் 7.48 சதவீதமாக இருந்தது. அக்டோபர் மாதத்தில் வேலையின்மை விகிதம் இதைவிட மோசமாக 8.45 சதவீதமாக உயர்ந்திருந்தது. நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் நவம்பர் மாதத்தில் 8.81 சதவீதமாகவும், டிசம்பர் மாதத்தில் 8.89 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.